Saturday, January 12, 2013


பொங்கல் வாழ்த்து.




"பழையன கழிதலும், புதியன புகுதலும்" என்ற பொன்மொழிக்கேற்ப பாரம்பரியமானதுதான் பொங்கல்.  பொங்கல் முதல் நாள் வீட்டிலுள்ள பழைய பொருட்களை அகற்றி, புதிய பொருட்களை வாங்குவர்.  அதை போல் நம் மனதில் உள்ள பழைய கசப்பான நினைவுகளை களைந்து, தித்திப்பான நினைவுகளுடன் எடுத்துவைக்கும் முதல் அடி தான் "போகி." 

"தை பிறந்தால் வழி பிறக்கும்," என்பது வழக்கு சொல்.  அதாவது, பண்டைய காலங்களில் விவசாயிகள்  அறுவடை செய்யும் காலம் தை ஒன்று.  அபோதுதான் அவர்களால் படைக்கப்பட்ட பொருட்களை விற்று அதில்வரும் லாபங்களை அந்த ஆண்டு முழுவதும் வைத்து மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.  இந்த காலக்கட்டத்திலும் அரிசி, பருப்பு, கரும்பு, மலர்கள், மண்பானை, மண் அடுப்பு, வண்ண கோலபொடிகள், தோரணங்களின் விலைகளும் சற்று அதிகமாக இருப்பதை காணமுடிகின்றது.

சூரியன் மகர ராசிக்கு இடம்பெயரும் காலம் தை ஒன்று.  அதனால், அந்த மாதம் சிறப்பானதாக இருக்கும் என, ஜோதிடவல்லுனர்கள் கூறுவதுண்டு.  அதைபோல், சபரிமலையில் ஐயப்பனின் "மகரஜோதி தரிசனம்" சிறப்பானது.  இந்த நன்னாளில் இத்தகைய சிறப்புடன் நாம் கொண்டடுவதுதான் "மகரசங்கராந்தி" அல்லது "தைபொங்கல்" என்று அழைப்பர்.

இந்த பண்டிகை சமீபகாலமாக மட்டும் கொண்டாடப்படுவது இல்லை.  இது தொன்றுதொட்டு பாரம்பரியமாக கொண்டாடப்படுவது.  பெண்கள் காலையில் எழுந்து வாசல் தெளித்து "பூகோலம்" வரைந்துள்ளதை பார்த்தாலே நாம் குடும்பத்திலுள்ள அனைவரின்மனதிலும் புத்துணர்வு பிறக்கும்.  அடுத்தாக எடுத்துக்கொண்டால் "பச்சை காய்கறிகள்".  ஒன்று இரண்டு அல்ல எண்ணில் அடங்காதவை (மொச்சை, அவரை, பூசணி, பட்டாணி, சர்க்கரைவள்ளி கிழங்கு, உருளைக்கிழங்கு......).  இந்த காய்கறிகளை நாம் சாப்பிடும்பொழுது உடலுக்கு தேவையான பரிபுரணமான பலன் கிடைகின்றது.

பால் பொங்கி பொங்கல் விழும்போது அந்த இல்லத்தில் செல்வம், மகிழ்ச்சி, இன்பம் பொங்கி நிரந்திரமாக இருக்கவேண்டும் என பெரியவர்களின் ஆசிர்வாதத்துடன் சொல்லபடுவதுதான் "பொங்கலோ பொங்கல்".  பொங்கி விழும் பாலில் குழந்தைகளை குளிப்பாட்டும் வழக்கமும் உண்டு.  இதனால் அந்த குழந்தைகளுக்கு நோய் தாக்காது என்ற நம்பிக்கை உள்ளது.

பச்சரிசி சாதம், இத்தனை வகையான காய்கறிகளை நாம் சாப்பிட்டால் வயிறு என்னவாகும்?  என இந்த தலைமுறை நினைகின்றோம்.  ஆனால் அது தவறு.  நம் முன்னோர்கள் அதற்கும் தீர்வு வைத்துள்ளனர்.  அதுதான், "கரும்பு", கரும்புச்சாறு அஜீரணம் மற்றும் பற்களுக்கு பெரிதும் உதவும்.

இதில் மற்றும் ஒரு சிறப்பு என்னவென்றால் நாம் மற்ற பண்டிகைகளில் கோவிலுக்கு சென்று சிறப்பு பிரார்தனை செய்வோம்.  ஆனால், பொங்கல் அன்று நாம் முழுக்கமுழுக்க கதிரவனையும் (சூரியன்), நம்மை சுற்றியுள்ள மற்றும், நமக்கு பெரிதும் உதவிபுரியும் கால்நடைகளையும் தெய்வமாக பாவித்து வழிபடுவோம்.

திருமணமான பெண்களுக்கு தாய் வீட்டு சீர்வரிசையாக தரப்படுகிற பொருட்களை "பொங்கசீர்" என மிகைப்படுத்தும் சொல் வழக்கு உண்டு, என்னவென்றால், பிறந்தவீட்டின் பெருமையும் சிறப்பையும் அந்த பெண்வீட்டார் (புகுந்தவீடு) முன்நிலையில் அப்பெண்ணுக்கு ஒரு கௌரவத்தை தேடித்தருவது இந்த பொங்கல்.

நம் இளைஞர்களின் வீரத்தை பறைசாட்டும் விதமாக திகழ்வது "ஜல்லிக்கட்டு" அல்லது "மஞ்சுவிரட்டு" இன்றளவும் நடைபெறுகின்றது.  உதாரணமாக மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.

இத்தகைய  பெருமையும், பழமையும் வாய்ந்த பொங்கல் இந்தமாதம் ஜனவரி 14, 2013 நாளில் வருகின்றது.  அடுத்த தலைமுறைகளுக்கும் வழிகாட்டி நம் பாரம்பரியத்தை பறைசட்டி உங்கள் இல்லங்களில் பால் பொங்குவதை போல மகிழ்ச்சியும் சந்தோசமும் பொங்க எங்கள் "சமையல் சூழ்திறம்" வாயிலாக உங்களுக்கு இனிமையான "பொங்கல் நல்வாழ்த்துக்கள்"

"பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
பொங்கி வரும் பொங்கல்"

மாரீஸ்வரி கார்த்திகேயன்
பிரியா அருண்
நாகலட்சுமி முருகானந்தம்

No comments:

Post a Comment